Dec 15, 2010

புகை-பகை!

புகைபிடிப்போரிடம், மாரடைப்பு வருவதற்கான மருத்துவ காரணங்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு சத்து போன்ற ஏதாவது ஒரு காரணம் உடன் இருந்தாலும், அவர்களுக்கு மாரடைப்பு வரும் சாத்தியக்கூறுகள் எட்டு மடங்கு அதிகரிக்கிறது. உலகம் முழுவதும் நேரும் இருதய நோய்களில், 20 சதவீதம் புகைபிடிப்பதாலேயே ஏற்படுகின்றன. புகை பிடிப்பதால் இருதயம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? சிகரெட்டில் இருந்து வரும் புகையில், 4,000 நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன பொருட்கள் கலந்துள்ளன.

இவற்றில் முக்கியமான இரண்டு பொருட்கள், இருதயத்தையும், உடலின் அனைத்து உறுப்புகளுக்கு செல்லும் ரத்தக் குழாய்களையும் வெகுவாக பாதிக்கிறது.  அவை...

1) நிக்கோட்டின் 2) கார்பன் மோனாக்சைடு

நிக்கோடினும், இருதய ரத்தக்குழாயும்:

சிகரெட் புகையிலுள்ள நிக்கோடின், இருதய தசைக்கு செல்லும் ரத்தகுழாயிலும், உடலின் மற்ற முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்தக் குழாயிலும் இறுக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அவ்வுறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைபடுகிறது. ஒரு சிகரெட் புகைத்தாலே, அதிலுள்ள நிக்கோடின், 45 நிமிடங்களுக்கு ரத்தக்குழாய்களில் இறுக்கத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது.

நிக்கோடினும், ரத்தநாளங்களில் அடைப்பும்:

சிகரெட்டில் உள்ள நிக்கோடின் ரத்தக்குழாய்களில், கொழுப்புச் சத்து படிவதை விரைவுபடுத்துகிறது. கொழுப்பு படிவங்கள் எளிதில் வெடிப்பு பிளவுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. இதுவே புகை பிடிப்போருக்கு, இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.

கொழுப்பு சத்தும், நிக்கோடினும்:

நன்மை பயக்கும் கொழுப்பான எச்.டி.எல்., ரத்தக்குழாயில் படியவிருக்கும் அல்லது படிந்திருக்கும் கொழுப்பு சத்தை, அதிலிருந்து அகற்றி, கல்லீரலுக்கு எடுத்து சென்று, இறுதியில் குடல் வழியாக வெளியேற்றுகிறது. தீய கொழுப்பான எல்.டி.எல்., கல்லீரலில் உருவாகும் கொழுப்பையும், உண்ணும் உணவில் இருந்து குடல் வழியாக ரத்தத்தில் கலக்கும் கொழுப்பையும், எடுத்து செல்லும் இவை, நேராக ரத்தக்குழாயில் படிய வைக்கின்றன. டிரைகிளசைடும் நமக்கு நல்லதல்ல. இந்த மூன்று கொழுப்புகளில், எல்.டி.எல்., கொழுப்பை அதிகமாகப் படிய வைக்கும் வேலையை நிக்கோட்டின் செய்கிறது.

கார்பன் மோனாக்சைடும், அதன் விளைவுகளும்:

கார்பன் மோனாக்சைடு, ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ள ஆக்சிஜனை விலக்கிவிட்டு, அந்த இடத்தில் தான் போய் அமர்ந்து கொள்கிறது. இதனால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. சரியான அளவு ஆக்சிஜன் கிடைக்க பெறாததால், இருதயமும், மற்ற உறுப்புகளும் எளிதில் சோர்வடைகின்றன. இருதய ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருந்து, அதனால் ரத்த ஓட்டமும் குறையும்பட்சத்தில், ஆக்சிஜனும் குறைவாக இருந்தால் அதன் பக்கவிளைவுகள் பன்மடங்காகி, மாரடைப்பு வரலாம் அல்லது நாளடைவில் இருதய தசை மிகவும் பலவீனமாகலாம். என்கிறார் மதுரை  டாக்டர் எஸ்.கே.பி.கருப்பையா.


மலச்சிக்கல்
நமது மலக்குடலின் முடிவில் ஆசனவாய் உள்ளது. மென்மையான சுருக்கு தசையாலான இந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் சற்று அதிகமாக இருக்கும். ஆசனவாய்ப் பகுதியில் பலவித பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.

வெடிப்பு, விரிசல், மலம் கழிக்கும்போதும், கழித்த பின்னரும் தாங்க முடியாத வலி, எரிச்சல், நமைச்சல், அரிப்பு, ரத்தக் கசிவு, சீழ்க் கட்டி, பிளவை, மூலம், ரத்தக் கட்டி போன்றவற்றைக் கூறலாம்.

நிறைய தண்ணீர் குடியுங்கள்:

பெரும்பாலான பிரச்னைகளுக்கு உணவு முறையும், மலச்சிக்கலுமே காரணமாக உள்ளது. நீர் குறைந்த, காய்ந்துபோன மலத்தை முக்கி வெளியேற்றும் போது மென்மையான தசைகள் பாதிப்புக்குள்ளாகி லேசாகக் கிழிந்து விடுகிறது அல்லது விரிசலடைந்து விடுகிறது. மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும், நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம். சிலருக்கு கீழ்க்கட்டிகள் ஏற்படக்கூடும். இதற்கு உரிய சிகிச்சை பெறுவது அவசியம். மூலம், ஆசனவாய் இறக்கம், புற்று நோய்க்கட்டிகள் ஏற்படக்கூடும்.

மூல நோய் காரணமாக மலம் கழிக்கும் போதும், கழித்த பின்னரும் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தக் கட்டிகளிலிருந்தும் ரத்தக் கசிவு உண்டாகலாம். இதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். வயிற்றில் பூச்சிகள் இருப்பதால், மலவாய்ப் பகுதியில் அரிப்பும், நமைச்சலும் இருக்கும்.

பெரும்பாலும் குழந்தைகள்தான் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாவார்கள். குதம், மலக்குடல் போன்றப் பகுதி முக்கியமானதும் சிக்கலானதுமாக இருப்பதால் இது தொடர்பான பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. இத்தகைய பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க மலக்குடல் நோய் சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர்.
                                                                                                        -அணு முத்துக்கிருஷ்ணன்

No comments:

Post a Comment