Nov 27, 2012

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம்


பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வாட்டி எடுக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு பல மருத்துவமுஊறைகளை கையாண்டு வருகின்றனர். இதில் சித்த மருத்துவர்கள் பரிந்துரைப்பது நிலவேம்பு கசாயம். இதற்கு பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளன. சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நிலவேம்பு மூலிகையின் பங்கு அதிகம் உள்ளது. ஒரு சிறந்த கிருமி நாசினி இதனால் உடலில் நோய் எதிப்பு சக்தி அதிகம் உருவாகின்றது. 

நிலவேம்பு இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் வளரும் ஒரு செடி

வகையாகும். இதில் சீமை நிலவேம்பு, சூரத்து நிலவேம்பு என இரு

வகைகள்  உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

இதனை சிரட்குச்சிகாண்டகம்கிராதம்கிரியாத்துகிராகதி

நாட்டுநிலவேம்பு,  அனாரியத்தித்தம்காண்டம் கோகணம் என  

பல  பெயர்களில்அழைக்கின்றனர்.


Tamil - Nila Vembu

English - Creat

Sanskri - Bhunimba

Malayalam - Kiriyatta

Telugu - Nila vembu

Botanical Name - Andrographis paniculata 

இதன் இலை தண்டு, வேர், பூ, காய் (சமூலம்) அனைத்தும் மருத்துவப் பயன் 

கொண்டவை.


வாதசுரம் நீரேற்றம் மாற்றுஞ் சுரதோடே

காதமென ஓடக் கடியுங்காண் மாதரசே

பித்த மயக்கறுக்கும் பின்புதெளி வைக்கொடுக்கும்

சுத்த நில வேம்பின் தொழில்

(அகத்தியர் குணபாடம்)


குடல் பூச்சி நீங்க:
வயிற்று பூச்சிகள் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடலின் வலிமை குறைந்து நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றோம். வயிற்று பூச்சிகள் நீங்க நிலவேம்பு நீரை நீரில் கொதிக்கவைத்து காஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேரத்தில் அருந்தி வந்தால் வயிற்று பூச்சி நீங்கும்.

உடல் வலு பெற:

உடல் வலிமையின்றி மெலிந்துகாணப்படுபவர்கள் நிலவேம்பின் பூ மற்றும் காய்களை கசாயமாக செய்து சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு வலிமை அடையும்.

மயக்கம் தீர:
சிலருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தொடர்ந்து நிலவேம்பு கஷாயத்தை அருந்தி வந்தால் சரியாகிவிடும்.

பசியை தூண்ட:
பசியால் அவதிப்படுபவர்களை காட்டிலும் பசியின்றி அவதிப்படுபவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுகள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகின்றது. இவர்கள் நிலவேம்பு பூ, மற்றும் காய் பகுதியை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதை காலையில் மட்டும் கஷாயம் செய்து குடித்துவந்தால் பசி நன்றாக ஏற்படும். அதே போன்று பித்தம் சார்ந்த வாந்தி, மயக்கம் போன்ற பல பிரச்னைகளுக்கு இந்த பாதிப்பில் இருந்து விடுபட இந்த கஷாயம் உதவுகிறது.

தலை வலி நீங்க:
அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை இரண்டு வேளையும் பருகி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறைந்து தும்மல் இருமல் போன்ற பாதிப்புகள் சரியாகும்.

குழந்தைகளுக்கு :
வயிற்று பொருமல் மற்றும் கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்கவைத்து ஆறவைத்து தினமும் 5 மிலி கொடுத்து வந்தால் வயிற்று பொருமல் சரியாகும்.



விஷ காய்ச்சல் குணமாக:
நிலவேம்பு 15 கிராம், கிக்சிலத் தோல் 5 கிராம், கொத்துமல்லி 5 கிராம், இவற்றை ஒன்றாக சேர்த்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து. அப்படியே மூடி ஒரு மணி நேரத் கழித்து வடிகட்டி பின்பு நான் ஒன்றுக்கு 30 மிலி என மூன்று வேளை குடித்து வந்தால் காய்ச்சல் சரியாகும்.

அஜீரணம் சரியாக:
நிலவேம்பு (பூ, காய்) காய்ந்தது 16 கிராம், வசம்புத்தூள் 4 கிராம், சதக்குப்பை விதைத்தூள் 4 கிராம், கோரைக்கிழங்கு தூள் 17 கிராம் இவற்றை ஒன்றாக சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு அதை 1 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி எடுத்து தினமும் அருந்தி வந்தால் உடல் வலு பெறும் மேலும் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.
தகவல் நன்றி: நக்கீரன், தினகரன் 

Nov 20, 2012

கருத்து சொல்லலாமா?

     கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி மெகா ஸ்டார்களை வைத்து எடுத்த சமீபத்திய படங்களான முகமூடி, தாண்டவம், மாற்றான் போன்றவை திரைக்கதையில் சொதப்பியதால் தியேட்டரை விட்டு நன்றாக ஓடுகிறது (தியேட்டரைவிட்டு) .    சூர்யா+கே.வி.ஆனந்த் கூட்டணி என்ற ஒரே காரணத்தினால் 'மாற்றான்' நன்றாக இருக்கும் என்று நம்பி குடும்பத்துடன் கடந்த சனிக்கிழமை  சென்றபொழுது தியேட்டரில் எங்களுடன் சேர்த்து மொத்தம் 13 பேர் இருந்தார்கள்.   ஆனால் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று  சமீபத்தில் பார்த்து ரசித்த படம் பீட்சா.  ஒரு டார்ச் லைட் வெளிச்சத்தை  வைத்து நல்லாதான் பயமுறுத்துராங்க!   நல்ல திரைக்கதை மற்றும் இயக்கம்.  கலைஞர் டி‌வி நாளைய இயக்குனரில் வெற்றிபெற்ற  கார்த்திக் சுப்பாராஜ் தன் திறமையை அகன்ற திரையிலும் நிரூபித்திருக்கிறார்.
                             
*********************************************************************************************************************
       
          இந்த தீபாவளிக்கு முன்பும்   பின்பும் தென்மாவட்டங்களில் நடந்த படுகொலைகள் அதை ஒட்டி நடந்த கலவரங்கள்,  கடையடைப்புகள், போக்குவரத்து நிறுத்தம் என்று ஒரே கலவர பூமியாக இருந்தது.    தீபாவளியை நிம்மதியாக கொண்டாட முடியாத சூழ்நிலை இப்பகுதிகளில் நிலவியது..   காவல் துறை உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டது இதன் உச்சம்!

                இப்பகுதிகளில் வருடந்தோறும் நிகழும் இம்மாதிரியான சம்பவங்களுக்கு அடிப்படை காரணத்தை அரசு அலசி ஆராய வேண்டும்.

                தொழில், வேலை வாய்ப்புகள்   இம்மாவட்டங்களில் வளர்ச்சியடையாததே   முதன்மை காரணம்.   சமீபத்தில்கூட  பல்வேறு தொழிற்சாலைகளுக்கு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்  கூட சென்னையை சுற்றியே பல்வேறு  தொழிற்சாலைகள் அமைய வாய்ப்பு வளங்கப்பட்டுள்ளன.   தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்கள்  தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.  

                                      தொழில்,  வேலை வாய்ப்புகள்  பெறுகியுள்ள நகரங்களில் இத்தகைய சாதியக்கலவரங்கள் ஏற்பட வாய்ப்பில்லாமல் சமூக ஒற்றுமை நிலவுகிறது.

                                  இனியாவது சென்னையை தாண்டி தென் மாவட்டங்களுக்கு ஒன்றிரண்டு தொழிற்சாலைகளை தள்ளிவிட்டால் மாநிலம் சமச்சீரான வளர்ச்சிகண்டு, சாதிய கலவரங்களும் ஒழிய வாய்ப்பு ஏற்ப்படும்.


இதெல்லாம் எனக்கே தோணுதே...., உங்களுக்கு தோணாமலா........ இருக்கும்ம்ம்.......!
*********************************************************************************************************************
டிவிட்டியத்தில் சில: 

பெட்ரோல் விலை ரூ.1.20 குறைப்பு!- இதுதான் தெளிய வச்சு அடிக்கிறதோ?

           
கடித்த கொசுவை கையில் பிடித்து பார்த்த பிறகு மகிழ்ச்சி ஏற்படுகிறது: அது டெங்கு கொசு இல்லை என உறுதிபடுத்தபட்டதால்   

இன்வெர்ட்டர் பயன் படுத்தாதவர்களின் மின் பங்கை அபகரிக்கும் குற்ற உணர்வு மின்வெட்டு சமயத்தில் ஏற்படுகிறது!       

ஒரு தடவை பொய் பேசினாலும், மை பூசினாலும் கடைசிவரைக்கும் மெயின்டைன் பண்ணனும் # பேக்ட்

எனக்கு ஒரு விசயம் புரியவில்லை! #இரண்டுமணி நேரம் இடைவெளிவிட்டு, விட்டு, விளம்பரத்தை காட்டி அதற்க்கு ஏன் நீயா நானா என்று பெயர் வைத்தார்கள்?

தமிழ் நாட்டில் பெரும்பாலானவர்கள், பெரும்பாலானவர்களுக்கு செய்யும் உதவி "சார் சைடு ஸ்டாண்ட்"

இரண்டாவது உதவி "லைட் எரியுது!"   

படித்து ரசித்த டிவிட்:

  குழந்தையாய் இருக்கும்பொழுது கோடிக்கணக்கில் இருக்கும் உலகஅதிசயங்கள் வளர்ந்தவுடன் வெறும் ஏழாகி விடுகின்றன

*********************************************************************************************************************

       ராம் படத்திற்காக யுவன் சங்கர் ராஜ இசையில், ஜேசுதாஸ் தன்  இனிமையான குரலில் வசீகரித்த பாடல்,   சூப்பர் சிங்கரில் சந்தோசின் குரலில் மேலும் ஒரு ஈர்ப்பை ஏற்ப்படுத்தியது.   அனுபவித்து பாடுவது என்பது இதுதான்!



*****************************************************************************************************************

கொஞ்சம் தாமதமாகிவிட்டது! 

ஜேர்மன் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் 49 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டனில் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. ஜேர்மனியின் பான் நகருக்கு அருகே உள்ள பேட் காடஸ்பெர்க்கிலிருந்து கடந்த 1963ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் திகதி கடிதமொன்று, பிரிட்டனில் உள்ள பேனா நண்பருக்கு அனுப்பப்பட்டது. இந்த கடிதம் 49 ஆண்டுகளுக்கு பின், கடந்த மாதம் 29ஆம் திகதி பிரிட்டனின் பெர்க்ஷயர் பகுதியில் உள்ள டெரிக் லெவிசுக்க கிடைத்துள்ளது. 

இதுகுறித்து லெவிஸ் கூறுகையில், ஜேர்மனியில் உள்ள கட்ரன் ரென்ட்ராப் என்ற பெண்ணும், நானும் 17 வயதிலிருந்து பேனா நண்பர்களாக இருந்தோம். அவளது தந்தையின் பிரிட்டன் வருகை குறித்து எனக்கு எழுதிய கடிதம் தான், இப்போது என் கையில் கிடைத்துள்ளது. அந்த காலத்தில் அஞ்சல் குறியீட்டு எண் நடைமுறையில் இல்லை. இது கடிதம் தாமதமாக கிடைத்ததற்கு ஒரு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த தபால் 49 ஆண்டுகள் தாமதமாக வினியோகிக்கப்பட்டதற்கு நாங்கள் காரணமில்லை என ராயல் மெயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
                                  தாமதமானாலும் சரியான முகவரிக்கு கொடுத்தமா!?இல்லையா? அத பாருங்க!
**********************************************************
    மும்பை கடையடைப்பை பற்றி கருத்து சொன்ன பெண்ணையும், அதற்க்கு லைக் போட்ட பெண்ணையும் மும்பை காவல் துறை கைது செய்திருக்கிறார்கள்!   கருத்து பரிமாற்றம் என்பது ஒரு ஆக்கபூர்வமான ஒரு விவாதம் தான்.  கலைஞரும், பவர் ஸ்டாரும் நினைத்தால் முக்கால்வாசி FACEBOOK தமிழர்கள் மீது புகார் கொடுக்கலாம்.    அந்த பெண்ணின் கருத்து சரியல்ல எனில் அதில் பதிலளிக்க வாய்ப்புள்ளது.  அதை விடுத்து, புகார் செய்தார்கள் என்பதற்காக கைது என்பது,  என்ன ஒரு  .......!

                        அய்யோ .......இந்த மாதிரி நான் கருத்து சொல்லலாமா......?  
இது சம்பந்தமாக  தற்போதைய செய்தி:

Nov 18, 2012

தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்!




தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறத
ு. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு.



இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன் று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.



தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல் பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.



இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது.

Nov 3, 2012

புலி வருது!


முன்பு ஒருமுறை இந்த கதையை படித்திருந்தாலும், இந்த கதை சொல்லும் நீதி எவ்வளவு உண்மை என்பதை மீண்டும்  மீண்டும் ஒருமுறை படித்த பொழுது ஞாபகத்திற்க்கு வந்தது!



               காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது. ஆளரவத்தில் அரண்டு மிரண்டுபோன புலி, அந்த டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது.

                    நாலாவது நாள்...

            பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூமுக்குள் தனியாக வந்த ஓர் ஆளை அடித்துச் சாப்பிட்டது.  அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் 'மிஸ்’ ஆனதைப்பற்றிஅலுவலகத் தில் யாருக்கும் கவலை இல்லாததால்,  எந்த அதிர்வு நிகழ்வும் இல்லை பயப்படும் படி எதுவும் நிகழவில்லை என்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி.


                   அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். யாரும் அவரைத் தேடவும் இல்லை, காணவில்லையே என்று பதறவும் இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!)

அடுத்த நாள், நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட்டை ஏப்பம்விட்டார் புலியார்.

நிறுவனத்தில் குண்டூசி விழுந்த சலனம்கூட இல்லை.

இதனால் குளிர்விட்டுப்போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து செட்டில் ஆனது.

அடுத்த நாள் பசிக்கவே இல்லாவிட்டாலும், சும்மா இருக்கட்டுமே என்று ஒரு நபரை அடித்து மூர்ச்சையாக்கி,தனக்குப் பக்கத்தில் இருத்திக்கொண்டது.

காபி கோப்பைகளைக் கழுவ வந்த அந்த நபர்தான் அலுவலகத்தின் பியூன். காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லை என்று மொத்த அலுவலகமும் திமிலோகப்பட்டு, தேடுதல் வேட்டையைத் துவங்கியது. 

அடுத்த பத்தாவது நிமிடத்தில், ரெஸ்ட் ரூமில் மூர்ச்சையாகிக்கிடந்த பியூனையும், தொடர்ந்து புலியையும்கண்டுபிடித்துவிட்டார்கள். 

புலியை அடித்துத் துவைத்து, கூண்டுக்குள் அடைத்து ஜூவுக்கு அனுப்பிவைத்தார்கள்!

நீதி:

     உங்களுக்கான நட்பு அல்லது மரியாதையை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ,செல்வமோ கிடையாது.

நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது!